யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (11) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பமாகி, தற்போது வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தபாலகத்துக்கு சொந்தமான காணி, நீதிமன்றத்துக்கு சொந்தமான காணி மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் உள்ளிட்ட பல பகுதிகள் இராணுவம் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை வெளிச்ச வீதி பகுதியை விடுவிக்க வேண்டும் என்பதுடன், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் மற்றும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டம் நிறைவடைந்த பின்னர், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரி தயாரிக்கப்பட்டுள்ள மகஜர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









