2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான கூட்டத்திலேயே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரத்தை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய முறையின் கீழ் சாதாரண தரப் பரீட்சையில் 7 பாடங்கள் இடம்பெறவுள்ளதுடன், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் அதில் உள்ளடக்கப்படவுள்ளன.
தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களையும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.








