தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்கள் உட்பட மொத்தம் 11700 மருத்துவ இடங்கள் உள்ளன. 22 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த இடங்களில் 65 விழுக்காடு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கும், 35 விழுக்காடு இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சுயநிதி கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டுக்கான கல்வி கட்டண விவரங்களை மருத்துவக் கல்வி இயக்குநகரம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் இரண்டரை இலட்சம் ரூபாய் உயர்த்தப்பட்டு 27 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 16 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கட்டணம் 30 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.








