வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை ‘டுபாய் லொக்காவின்’ ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேக நபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, சந்தேக நபர்கள் கேகிராவ பகுதியில் மறைந்திருப்பது அடையாளம் காணப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்றுமுன்தினம் (26) அதிகாலை கேகிராவ பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.
அங்கு பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.
கைது செய்ய முற்பட்டபோது பொலிஸாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அதில் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அவ்வாறு தப்பிச் சென்றவர் பிரதேச சபைத் தலைவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பல வழிகளில் சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றார். பினனர் மஹரகமவில் வைத்து விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் புலனாய்வு அதிகாரிகளும் துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.

அதனையடுத்து பிரதேச சபைத் தலைவரின் கொலையை சுமார் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி துப்பாக்கிதாரியையும் கேகிராவில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உட்பட 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட சந்தேக நபர்கள் குழு நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.








