மட்டக்களப்பு கிரான் கோரகல்லி மடு விசேட தேவையுடையோர் மண்டபத்தில் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பு மாவீரர் பணிமனை மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தினால் இன்று (21) பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் முதல் நிகழ்வாக மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல கட்டமைப்பை திறன் பட மேற்கொள்ளும் முகமாக மாவீரர் துயிலும் இல்லத்துக்கான யாப்பு வைபவ ரீதியாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசியல் வேலைத்திட்டத்திற்காக புதிய பாதை மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் காப்பகத்தின் தலைவர் தேவராஜா தீபன் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இன்று (21) காலை இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றதுடன் உயிர் நீத்த உறவுகளுக்காக அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இறந்த உறவுகளை நினைந்து மாவீரர்களின் பெற்றோர்களினால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் நிகழ்வில் மட்டக்களப்பின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து மாவீரர்களின் உறவுகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் உலர் உணவு பொதிகள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பின் தலைவர் தேவராஜா தீபன் சிவ ஸ்ரீ இராமன் சுதன் மற்றும் மாவட்ட பிராந்தியபொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

















