காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை தமிழர்களைப் பொருத்தவரையில் கரிநாளாக அனுஸ்டிப்பதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினரால் விடுக்கப்பட்ட அறைகூவலுக்கு அமைவாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி எமது மக்களை அணிதிரட்ட வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தமிழ் மக்கள் ஏன் இவ்வாறான ஒரு நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களாகச் சென்றார்களா? தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு எமது மக்களைத் தள்ளி விட்டார்களா? என்பதை உற்று நோக்க வேண்டும்.

ஆரம்பகாலத்தில் தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து பயணிக்கத்தான் தயாராக இருந்தார்கள். ஒன்று சேர்ந்து பயணித்தும் இருந்தார்கள். இந்த நாட்டை ஒரு சுபீட்சமான நாடாக முன்னேற்றுவதற்காக அவர்களின் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். காலப்போக்கிலே தெனினலங்கை இனவாத அரசுகள் இந்த நாட்டின் ஒன்றிணைந்த வடகிழக்கிலே தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் விதத்திலே இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் விதமாக சிங்களக் குடியேற்றங்களை அமைத்து தமிழ் மக்களை சொந்த நிலத்தில் எதிர்காலமற்றவர்களாக மாற்றியமைப்பதற்காக மேற்கொண்ட செயல்கள் தான் தமிழ் மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசுகள் மீதாக நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அந்த நிலையில் தான் சாத்வீகப் போராட்டங்கள், ஆயுதப் போரட்டங்கள் இடம்பெற்றன. அவற்றினூடாகத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பும் தமிழ் மக்கள் சொல்லொனாத் துயரங்களை எதிர்கொண்டார்கள்.
புதிதாக வந்திருக்கும் ஆட்சி கூட தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில் வடகிழக்கு மக்கள் அதற்கு வாக்களித்தும், கடந்த கால தென்னிலங்கைத் தேசியக் கட்சிகள் எவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றினவோ அதேவகையான முன்னெடுப்புகளையே முன்னெடுப்பதுடன், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாத பல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டும் வருகின்றது. மிக முக்கியமாக தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையைத் தருவதற்கான எந்த முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை. அதற்கான ஆயத்தங்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் கொண்டுள்ள இந்த மாகாணசபைத் தேர்தலைக் கூட நடாத்துவதற்கு ஆட்சியாளர்கள் இன்னமும் தயாராக இல்லை. உள்ளுராட்சித் தேர்தல்களை மிக விரைவாக நடத்தியவர்களால் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஊட்ட முடியவில்லை.

இதற்கு அப்பால் தொல்லியல் திணைக்களம், வன இலாகா, வன ஜீவராசிகள், கரையோரத் திணைக்கம் உள்ளிட்டவற்றின் ஊடாகத் துமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பறிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் மகாவலி அபிவிருத்தியின் கிவுல் ஓயாத் திட்டத்தின் ஊடாகவும் இவ்வாறானதொரு உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த சூழ்நிலையில் தமிழ் மக்கள் எந்த நம்பிக்கையிலே 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தை தமிழ் மக்களுக்கும் சேர்த்துக் கிடைத்த சுதந்திரமாகக் கருத முடியும். தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வகையிலே கடத்திக் காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதிப் பொறிமுறை, நிலங்களை விடுவிப்பதற்கான பொறிமுறைகளாவது ஆரம்பிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓரளவேனும் நம்பிக்கையைத் துளிர்விடக் கூடிய செயற்பாடாக அமையும்.
ஆனால் கடந்த காலங்களில் எவ்வாறு நிகழ்ந்ததோ அதே போன்றதான விடயங்களையே இந்த அரசும் சிங்களப் பேரினவாதப் பாணியில் செய்து வரும் நிலையில் 1948ம் ஆண்டு இலங்கைக்குக் கிடைத்த அந்த சுதந்திரம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளவார்கள்.

தமிழ் மக்களுக்கான நீதி தராத பட்சத்தில், நிலங்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில், தமிழ் மக்களின் மொழி உரிமை, நில உரிமை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் இந்த சுதந்திரநாளை எவ்வாறு ஏற்று நடப்பது. எனவே தமிழரசுக் கட்சியின் சார்பாக, தமிழ் மக்களின் சார்பாக, நாம் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் என்ற ரீதியில் அவர்களின் விரும்பங்களையே நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட இந்த விடயத்திலே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து. எமது அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
எனவே உணர்வுள்ள தமிழர்களாக நாம் ஒன்றிணைந்து எமது உரிமைகளுக்காக எமது மொழிக்காக, எமது நிலத்துக்காக இந்த சுதந்திர நாளை கரிநாளாக அனுஸ்டித்து, அனைத்து தமிழ் பேசும் உறவுகள் ஒன்றுதிரண்டு நாளைய பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.








