முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தலைமையில் நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நிகழ்ச்சிக்காக விடுக்கப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் இருந்து சுமார் 350 பேர் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தினந்தோறும் தேர்வுகளுக்காக பரிசீலிக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்வுகளின் முதல் கட்டம் இன்று (14) கொழும்பில் உள்ள சுகததாச மைதானத்திலும் ஆர். பிரேமதாச மைதானத்திலும் நடைபெற்றது.
இன்றைய தேர்வில் சிறப்பாக பந்து வீசிய வீரரைப் பற்றி கருத்து தெரிவித்த லசித் மலிங்க, தற்போது கண்டறியப்பட்ட வேகமான பந்து வீச்சாளர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்தார். அவர் மணிக்கு சுமார் 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியதாகவும், எதிர்காலத்தில் தனது வேகத்தை மேலும் அதிகரிக்கும் திறன் அவருக்கு இருப்பதாகவும் மலிங்க குறிப்பிட்டார்.
மேலும், தேர்வில் கலந்து கொண்ட வீரர்களை தொடர்ந்து பயிற்சி செய்து உடற்தகுதியை மேம்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியதுடன், எதிர்காலத்தில் இன்னும் வேகமாக பந்து வீசும் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.







