கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, ‘மொடர்ன் எலக்ரிகல்’ (Modern Electricals) வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான நஜிமுதீன் நஷாட் (வயது 39) என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, உறவினர் ஒருவரை வழியனுப்பிவிட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சாரதிக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த வர்த்தகர் நஷாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான வேனை உயிரிழந்தவரின் உறவினரான இளைஞர் ஒருவரே செலுத்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.








