திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவன் தாக்கப்படுவதைப் பதிவுசெய்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – பேரலபனதார, தண்டேனியகந்த பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், திருட்டு சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜூன் 3 ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், தனது மகன் முறைப்பாட்டாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிய காணொளியும் விசாரணைகளில் முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 40 வயதுடைய பெண், அவரது 47 வயது கணவர், 19 வயது மகன் மற்றும் 17 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காலி மாவட்டத்தின் மிலித்துவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சிறுவன் மீதான திருட்டு குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் சம்பவம் ஆகிய இரு விடயங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








