யாழ்ப்பாணம் – நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாவாந்துறை கடற்கரை வீதி வழியாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான உழவியந்திரம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் உழவியந்திரத்தின் கீழ் சிக்கிய முதியவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகளில், குறித்த உழவியந்திரத்தை ஓட்டிய சாரதியிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், குறுகிய காலத்திற்குள் அதே வாகனம் இரண்டாவது முறையாக விபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிமம் இல்லாத சாரதிகளை கொண்டு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதிகளில் கனரக வாகனங்களை இயக்குவது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








