யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டுவிலில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன், திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதாகவும், அதில் பயணித்த மூன்று இளைஞர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வாசன் காஜானன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்த மற்றைய இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








