வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தமது முறைப்பாடுகள் மற்றும் பணித்தள சிக்கல்களை விரைவாகவும் எளிதாகவும் சமர்ப்பிப்பதற்காக ‘லங்காகொநெக்ட்’ (LankaConnect) எனும் புதிய கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டு முகாமைத்துவ செயலி, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில், கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச வீட்டுப் பணியாளர் தினத்தை முன்னிட்டு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்த செயலி மூலம் நேரடியாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சமர்ப்பிக்க முடியும்.

அதேபோன்று, கல்வி அல்லது வதிவிட நோக்கத்திற்காக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கன்சியூலர் பிரிவுக்கும் இந்த செயலி ஊடாக நேரடியாக முறைப்பாடுகளை அனுப்பலாம்.
முறைப்பாடுகளை எழுத்து வடிவத்துடன் மட்டுமன்றி, குரல் பதிவுகள் மற்றும் காணொளிகள் மூலமும் சமர்ப்பிக்க வசதி வழங்கப்பட்டுள்ளது.
உலகின் எந்த நாட்டிலிருந்தும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்பதுடன், சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளின் தற்போதைய நிலையை நேரடியாக கண்காணிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிதி உதவியுடன் இலங்கை மொபிடெல் நிறுவனத்தினால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை Google Play Store மற்றும் Apple App Store ஊடாக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.








