நாட்டில் டெங்கு நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய இறப்பு விகிதம் 0.06 சதவீதமாக உள்ளது.
குறிப்பாக, ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நோய் பரவல் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் 124 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான மழையால் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, தூய்மையைப் பேணுவதன் மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.








