இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
1976 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான இந்த திரைப்படங்களின் பாடல்களை, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவன் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் இளையராஜா பதிவேற்றியதையடுத்து, அவற்றின் காப்புரிமையை கோரி நடவடிக்கை எடுத்ததாகக் கூறி சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
1957 ஆம் ஆண்டின் இந்திய காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில், திரைப்படத்திற்காக இசையமைப்பாளருக்கு ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் செய்தால், அந்தப் படைப்பின் முதல் காப்புரிமை தயாரிப்பாளருக்கே உரியது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தயாரிப்பாளர்கள் தங்களது உரிமையை சரிகம நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால், குறித்த பாடல்களுக்கு இளையராஜா தனிப்பட்ட உரிமை கோர முடியாது என்ற சரிகம தரப்பின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து, இடைக்காலத் தடையை நீக்குமாறு இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் காரணமாக, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை குறித்த 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை தொடர்ந்தும் அமலில் இருக்கும்.








