சமூக ஊடகங்களில் அண்மையில் பெரும் கவனத்தை ஈர்த்த சிறுமி ஒருவரும் அவரது செல்லப் பிராணியான முள்ளம்பன்றியும் தொடர்பான காணொளி, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரின் கவனத்தை பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் இந்த காணொளி பங்களாதேஷில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு பரவியிருந்தது. அதில், வயல்வெளியில் நடந்து செல்லும் ஒரு சிறுமியைப் பின்தொடர்ந்து எந்த பயமும் இன்றி ஒரு குட்டி முள்ளம்பன்றி செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது.
எனினும் பின்னர் வெளிவந்த தகவல்களின்படி, அந்த சிறுமி இலங்கையைச் சேர்ந்தவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தகவல் சரிபார்ப்பின் மூலம், அந்தச் சிறுமி பொலன்னறுவை மாவட்டத்தின் ‘14 எள’ (14ஆம் கால்வாய்) கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தரம் 2 இல் கல்வி பயிலும் அந்த சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முள்ளம்பன்றி, முன்னதாக நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் வந்துள்ளது. பின்னர் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் அதனை பராமரித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
அதிலிருந்து அந்த முள்ளம்பன்றி குடும்பத்தின் ஒரு அன்பான செல்லப் பிராணியாக வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








