“உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தால் நேற்று அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருது வழங்கும் விழா’வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறுமிகளின் ஒழுக்கம், நேர்மை மற்றும் சமூக அர்ப்பணிப்பைப் பாராட்டி, இம்முறை விருது விழாவில் 338 ஜனாதிபதி விருதுகளும், 12 பிரதமர் விருதுகளும் உள்ளடங்கலாக மொத்தம் 350 விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பிரதமர் நேரில் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
“பெண் சாரணர் இயக்கத்தின் முக்கிய வலிமையே பின்னணி எதுவாக இருந்தாலும் சகலருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதாகும். இன்று யுவதிகள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இளம் தலைவிகளாகிய நீங்கள் முன்வர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமன்றி, ஒழுக்கநெறி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பிரஜைகளை உருவாக்குவது இன்றியமையாதது. அதற்கு சாரணர் இயக்கம் ஆற்றி வரும் பங்களிப்பு பாராட்டத்தக்கது.
இலங்கையில் 1917ஆம் ஆண்டு கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சாரணர் இயக்கம், இன்று ஏழு பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றது.
இதில் ஒரு பெண் சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த அங்கீகாரமாக ‘ஜனாதிபதி விருது’ கருதப்படுகின்றது. பல்வேறு சவால்கள் மற்றும் பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சாரணர்களுக்கே இந்த உயரிய விருது வழங்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் இலங்கை பெண்கள் சாரணர் இயக்கத்தின் தலைவி ஸ்வர்ணிகா பிடிகல, முதன்மை ஆணையாளர் கலாநிதி குஷாந்தா ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள், விருது பெற்ற சாரணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.








