செப்டெம்பரிலிருந்து பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாய தரப் பரிசோதனை!
நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தில் இடம்பெறும் பல்வேறு விபத்துகளுக்கு சாரதிகளின் அலட்சியத்துடன், வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனை கருத்தில் கொண்டு, சேவையில் ஈடுபடும் அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களின் தரநிலையை முறையாக ஆய்வு செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக தகுதி வாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செப்டெம்பர் மாத இறுதிக்குள் தரப் பரிசோதனைத் திட்டத்தை முழுமையாக ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் கட்டாய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.








